Friday 18 August 2023

அழைப்பாணை இல்லாத கடற்கரைத் தெரு கந்தூரி

 மாவட்ட ஆட்சியருக்கும் முதலமைச்சரின் தனி மின்னஞ்சலுக்கும் :

 
மரியாதைக்குரிய ஐயா,

கந்தூரி காலத்தில் வழக்கமாகப் பட்டுக்கோட்டை வட்டாட்சியரிடமிருந்து இரு நாட்களுக்கு முன்னர் அழைப்பாணை அனுப்பப்பட்டு, கந்தூரிக்கு ஒருநாள் முன்னர் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்படும். அதில் எங்களுடைய கருத்துகளும் கோரிக்கைகளும் கேட்கப்படும். இவ்வழக்கம் கடந்த பதினொரு ஆண்டுகளாக நடைமுறையில் இருந்துவருகின்றது.

ஆனல், இம்முறை கந்தூரி தினமான இன்று (18.8.2023) பகல் 2:30 வரை எங்களில் யாருக்கும் அழைப்பாணை அனுப்பப்படவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

அரசியல்வாதிகளின் தலையீடு இருப்பதாக அறிகின்றோம்.


Wednesday 16 August 2023

கடற்கரைத் தெரு கந்தூரி - 584, மாவட்ட ஆட்சியருக்கு மனு

 15.8.2023

உயர்திரு தீபக் ஜேகப் I.A.S. அவர்கள்

மாவட்ட ஆட்சியர்,

மாவட்ட ஆட்சியர் அலுவலகம்

தஞ்சாவூர் – 613 001

தொலைபேசி : 04362-230102 (O); 04362-230201 (R)
தொலைநகல் : 04362-230857 (O); 04362-230627 (R)

மின்னஞ்சல் :  collrtnj@nic.in

பொருள்: தஞ்சை மாவட்டம், அதிராம்பட்டினத்தில் கந்தூரியைத் தடை செய்ய வேண்டி

மகிழ்வான சுதந்திர தின வாழ்த்துகளுடன்,

மரியாதைக்குரிய ஐயா,

கடந்த பல வருடங்களாக அதிராம்பட்டினத்தில் அமைந்துள்ள இரு தர்ஹாக்கள் சார்பாக  வழிபாடு என்ற பெயரில் அதிரை நகரத் தெருக்களில் கந்தூரிக் கமிட்டியினர் ஊர்வலம் நடத்தி வருகின்றனர். “கந்தூரியும் ஊர்வலமும் முஸ்லிம்களின் சமயமான இஸ்லாத்திற்கு எதிரானவை” என்று இஸ்லாமிய மார்க்க அறிஞர்கள் பலர் எடுத்துக்கூறித் தொடர்ந்து பிரச்சாரம் செய்துவருகின்றனர். எங்களால் முடிந்த அளவு அவ்வப்போது அறவழியில் விழிப்புணர்வுப் பிரசுரங்கள் வெளியிட்டு வருகின்றோம்.

மார்க்க அறிஞர்களின் பிரச்சாரங்களாலும் விழிப்புணர்வுப் பிரசுரங்களாலும் பொதுமக்கள் ஓரளவு தெளிவடைந்து, அனாச்சாரங்களிலிருந்து விடுபட்டு வருகின்றனர். என்றாலும்  கந்தூரி ஆர்வலர்கள் பிடிவாதமாகத் தம் மௌட்டீக மூடநம்பிக்கைகளிலிருந்து விடுபடாமல் தொடர்ந்து அவற்றிலேயே மூழ்கிக் கிடப்பதோடு உயிர்ப்பலி கொடுப்பதற்கும் தயங்குவதில்லை.  கடந்த 23.12.2012இல் கந்தூரி எனும் மடமையினால் அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் ஓர் உயிர் பலியானது (‘இன்னுமா தயக்கம்?’ இணைப்பு).

கந்தூரி மற்றும் ஊர்வலம் என்பன சமூக விரோதச் செயல்கள், தனிமனித விரோதம் மற்றும் அரசியல் பழிவாங்கல்கள் நடத்துவதற்குப் பயன்படுவது வழக்கமாகத் தொடர்கிறது. கடந்த 2012 ஆண்டின் காட்டுப்பள்ளிக் கந்தூரி ஊர்வலத்தின்போது நடுத்தெரு தக்வாப் பள்ளியில் மாலைத் தொழுகைக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தின்போது திட்டமிட்ட கொலை முயற்சியொன்று அதிராம்பட்டினம் காவல்துறையில் முதல் தகவல் அறிக்கையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது (96&97/2012). அதற்கு முன்னரும் கந்தூரிகளின்போது நடைபெற்ற கலவரங்கள் பல. அவற்றுள் சில கலவரங்கள் மட்டுமே அதிராம்பட்டினம் காவல்துறையினால் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதிராம்பட்டினம் கடற்கரைத் தெருவில் அமைந்துள்ள தர்ஹாவில் எதிர்வரும் 18.8.2023இல் தொடங்கி, 31.8.2023வரை பதின்மூன்று நாள்கள் கந்தூரி நடைபெறவுள்ளது.

கந்தூரிகளைத் தடை செய்யவேண்டும் என்ற எங்களின் கோரிக்கைக்கான நியாயமான காரணங்கள்:

v  இறந்துபோன மகான்களின் பெயரால் கந்தூரி விழாக் கொண்டாட்டம் என்பது நாங்கள் பின்பற்றும் இஸ்லாமிய சமயத்துக்கு எதிரானது.

v  கந்தூரிகளில் நடைபெறும் பாட்டு, கூத்து, கச்சேரிகள், சூதாட்டம் ஆகியன இஸ்லாமிய சமய விழுமியங்களுக்கு எதிரானவை.

v  முறையற்ற தொடர்பு/உறவு மற்றும் கள்ளக் காதல் ஆகியன உருவாவதற்குக் கருவறையாகக் கந்தூரி விழாக்கள் பயன்படுகின்றன.

v  பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளிடம் கந்தூரிக் கமிட்டியினரால் வசூல் செய்யப்படும் பணம், இஸ்லாத்துக்கு எதிரான செயல்பாடுகளுக்குப் பயன்படுத்தப்படுவதோடு இரவில் வாண வேடிக்கை எனும் பெயரால் முதியோர், நோயாளிகள், குழந்தைகள் ஆகியோருக்குத் தொல்லை தருகிறது.

v  கந்தூரி ஊர்வலத்தின்போது சமூக விரோதச் செயல்களான போதைப் பயன்பாடு, ஆபாசப் பேச்சுகள், கலவரங்கள், கல்லெறிதல், பெண்களைக் கேலி செய்தல் நடைபெறுகின்றன.

மேற்காணும் தொல்லைகளையும் சமூக பாதிப்புகளையும் உண்டாக்குகின்ற கந்தூரியைத் தாங்கள் தயவு கூர்ந்து தடை செய்வதற்கு ஆவண செய்ய வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

நன்றி!

Jameel M. Salih (signed)

தலைவர்

முக்கியக் குறிப்புகள்:

(1)   இம்மடல், பத்தாண்டுகளுக்கு முன்னர் கடந்த 4.5.2013 நாளிட்டு, தஞ்சை மாவட்ட ஆட்சியர், உயர்திரு கே. பாஸ்கரன் ஐஏஎஸ் அவர்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பப்பட்ட மடலிலுள்ள சொற்களில் மிகச் சில திருத்தங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

(2)   கந்தூரிகள் இஸ்லாத்திற்கு எதிரானவை என்பது எங்கள் நிலைப்பாடு என்பதால் எங்களுக்கும் கந்தூரிகளுக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என்றும், சட்டம்-ஒழுங்குப் பிரச்சினையில் நாங்கள் காவல்துறைக்கு முழு ஒத்துழைப்புத் தருவோம் என்றும் எங்களுடைய எல்லா மடல்களிலும்,  பத்தாண்டுகாலப் பேச்சுவார்த்தை உடன்படிக்கைகளிலும் அழுத்தமாகப் பதிவு செய்து உறுதியுடன் இருந்துவருகின்றோம்,

நகல்கள்:

1.தஞ்சாவூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் - Fax : 04362-271553, spthanjavur@yahoo.com

2.நகர காவல்துறை ஆய்வாளர் அவர்கள், அதிராம்பட்டினம்.

 

For our record
 

 
எதிர்ப்புக் குரல்கள்

 

அஸ்ஸலாமு அலைக்கும்

 

எதிர்வரும் 15 8 2023 அன்று ஹஜரத் ஹாஜா சேக் அலாவுதீன் கந்தூரி விழா நடைபெற இருப்பதால் இந்த கந்தூரி விழாவிற்கும் கடற்கரை தெரு ஜமாத் நிர்வாகத்திற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை என்பதை இதன் மூலம் ஜமாத் தெரிவித்துக் கொள்கிறது.

 

இப்படிக்கு,

கடற்கரை தெரு ஜும்மா பள்ளி நிர்வாகம்

(‘பீச் உறவுகள்’ வாட்ஸ்-அப் குழுமம் வழியாக)

 


Tuesday 24 January 2023

காட்டுப்பள்ளிக் கந்தூரி ஊர்வலத்தில் விதி மீறல்கள்

பெறுநர் :                                                                                                             நாள் : 24.1.2023

திரு. ஆய்வாளர் அவர்கள்,

நகரக் காவல் நிலையம்,

அதிராம்பட்டினம் நகராட்சி.

 

நகல்கள்:

1.     மாவட்ட ஆட்சியர் அவர்கள், தஞ்சாவூர்

collrtnj@nic.in, collrtnj@tn.nic.in, (மின்னஞ்சல் வழியாக)

2.     வட்டாட்சியர் அவர்கள், பட்டுக்கோட்டை

tahpkt.tntnj@nic.in (மின்னஞ்சல் வழியாக)

 

பொருள்: காட்டுப்பள்ளிக் கந்தூரியில் நடைற்ற விதி மீறல்கள்

 

மரியாதைக்குரிய ஐயா,

பட்டுக்கோட்டை வட்ட அலுவலகத்தில் கடந்த 22.1.2023 அன்று நடைபெற்ற ‘அமைதிப் பேச்சுவார்த்தை கூட்ட நடவடிக்கை’ (ப.வெ.03/2022/அ7) குறிப்புகளின்படி, காட்டுப்பள்ளிக் கந்தூரி விழாக் குழுவினரும் எதிர்த் தரப்பினரும் ஏற்றுக்கொண்டு, கையெழுத்திட்டு எடுக்கப்பட்ட முடிவுகளில் பெரும்பாலானவை விழாக்குழுவினரால் மீறப்பட்டுள்ளன. அவையாவன :

1.     விதி எண் ஒன்றில் குறிப்பிட்டபடி மாலை 4 மணிக்கு ஊர்வலம் தொடங்கப்படவுமில்லை, மாலை 7 மணிக்கு முடிவுறவுமில்லை. மாறாக, இரவு மணி 8.45 வரை ஊர்வலம் தொடர்ந்தது.

2.     தடை செய்யப்பட்ட மேலத்தெருவையும் தாண்டி, தொக்காலிக்காடு செல்லும் மேற்குத் திசை சாலையிலும் ஊர்வலம் சென்றது.

3.     ஊர்வலத்தை விழாக் குழுவினர் முன்னெடுத்துச் செல்லவில்லை.

4.     உருப்படிகள் எண்ணிக்கை, காவல்துறையினரின் காணொளிப் பதிவுகளில்.

5.     பள்ளிவாசல்களுக்கு 100 மீட்டர் முன்னும் பின்னும் இசைக்குழுவினர் நிறுத்தவில்லை.

6.     ஊர்வலம் முழுதும் ஆட்டம்-பாட்டம் அலப்பறைகள் ஓயவில்லை.

 

“மேற்காணும் நிபந்தனைகள் மீறப்பட்டதாகத் தெரியவந்தால், காவல்துறையினரால் வழக்குப் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்ற வட்டாட்சியரின் உறுதியான எச்சரிக்கைகளுக்கு ஏற்ப கந்தூரி விழாக் குழுவினருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து, நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

 

பின் குறிப்பு : வட்டாட்சியரின் அறிவுறுத்தலுக்கு ஏற்ப, கந்தூரியின் மற்ற நாட்களில் இடம்பெறும் சமூக விரோதச் செயல்களையும் காவல்துறையினரின் கவனத்துக்குக் கொண்டுவருவோம்.

 

நன்றி!

இப்படிக்கு,

                                                                                                                ஜமீல் M ஸாலிஹ்

                                                                                                     செயலாளர் – 9043727525